50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தபின், ஒன்றாகக் கருணைக்கொலை செய்துகொண்ட தம்பதி - நெகிழ்ச்சிக் கதை

ஒன்றாக இறத்தல்: மகிழ்ச்சியான தம்பதி வாழ்வை முடித்து கொள்ள முடிவெடுத்தது ஏன்?
படக்குறிப்பு, ஜான் (70) மற்றும் எல்ஸ் (71) இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம்
  • எழுதியவர், லிண்டா பிரஸ்லி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

[இந்த கட்டுரையில் மரணம் குறித்த விவரணைகள் உள்ளன. அவை சிலரைச் சங்கடப்படுத்தலாம்.]

தம்பதிகளான எல்ஸ் மற்றும் ஜான் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஜூன் மாதத்தின் துவக்கத்தில், அவர்களுக்கு இரு மருத்துவர்கள் மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மருந்தை கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக இறந்தனர். நெதர்லாந்தில், இதனை இரட்டை கருணைக்கொலை (duo-euthanasia) என்கின்றனர். இந்த அரிதான சம்பவம் அங்கு சட்டப்பூர்வமானது தான். ஒவ்வொரு ஆண்டும், அதிகமான டச்சு தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள்.

அவர்கள் தானாக முன்வந்து இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜான் மற்றும் எல்ஸ் வாழ்ந்துவந்த வாகனம் நெதர்லாந்தின் வடக்கே ஃப்ரைஸ்லேண்ட் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. சூரிய ஒளியில் கடற்கரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் பயணங்களை விரும்பும் தம்பதிகள், அவர்களது திருமண வாழ்க்கையின் பெரும்பகுதியை மோட்டார் ஹோமில் அல்லது படகுகளில் கழித்தனர்.

நான் அவர்களைச் சந்திக்கும்போது, ​​ஜான் மகிழ்ச்சியாகத் தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டார்.

"நாங்கள் ஒரு சமயம் கற்களின் குவியல் போன்று இருந்த வீட்டில் வாழ முயற்சித்தோம், ஆனால் அது வேலை செய்யவில்லை," என்று நகைச்சுவையாகக் கூறுகிறார்.

70 வயது ஜான், அவரது வாகனத்தின் டிரைவிங் சீட்டில் ஒரு காலை அவருக்குக் கீழே வளைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இதுவே அவரது தொடர்ச்சியான முதுகு வலியைப் போக்க ஒரே வழியாகும். 71 வயதான அவரது மனைவி எல்ஸ், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வாக்கியங்களை உருவாக்குவதே கடினமாக உள்ளது.

ஒன்றாக இறத்தல்: மகிழ்ச்சியான தம்பதி வாழ்வை முடித்து கொள்ள முடிவெடுத்தது ஏன்?
படக்குறிப்பு, ஜான் தனது மகனுடன் 1982 இல் எடுத்த புகைப்படம்

"இது நன்றாக இருக்கிறது" என்று தனது உடலை சுட்டிக்காட்டி சொல்லும் எல்ஸ், தன் தலையை சுட்டிக்காட்டி "இது மோசமான நிலையில் இருக்கிறது,” என்றார்.

ஜான் மற்றும் எல்ஸ் அவர்கள் படித்த மழலையர் பள்ளியில் சந்தித்த பிறகு நீண்டகால நண்பர்களாக ஆனார்கள்.

ஜான் தன் இளமை காலத்தில் ​​நெதர்லாந்தின் தேசிய இளைஞர் அணிக்காக ஹாக்கி விளையாடினார், பின்னர் விளையாட்டுப் பயிற்சியாளராக ஆனார். எல்ஸ் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இருப்பினும், அவர்களை ஒன்றிணைத்தது படகுகள் மற்றும் தண்ணீரின் மீதான அவர்களின் பரஸ்பர காதல் தான்.

ஒன்றாக இறத்தல்: மகிழ்ச்சியான தம்பதி வாழ்வை முடித்து கொள்ள முடிவெடுத்தது ஏன்?

பட மூலாதாரம், Els van Leeningen

படக்குறிப்பு, 1968 இல் எல்ஸ் புகைப்படம், பிற்காலத்தில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டார்

'இதனை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்'

ஒரு இளம் ஜோடியாக அவர்கள் ஒரு படகில் வசித்து வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு சரக்குப் படகை விலைக்கு வாங்கி நெதர்லாந்தின் உள்நாட்டு நீர்வழிகளைச் சுற்றிப் பொருட்களைக் கொண்டு செல்லும் வணிகத்தை உருவாக்கி செயல்படுத்தினர்.

இதற்கிடையில், எல்ஸ் அவர்களின் ஒரே மகனைப் பெற்றெடுத்தார் (அவர் மகனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்). அவர் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வரும்படியான போர்டிங் பள்ளியில் படித்தார். வார இறுதி நாட்களை தனது பெற்றோருடன் கழித்தார்.

பள்ளி விடுமுறை நாட்களில், ஜான் மற்றும் எல்ஸ் தங்கள் குழந்தை படகில் இருந்தபோதும், ​​ரைன் ஆற்றங்கரை அல்லது நெதர்லாந்தின் தீவுகள் போன்ற சுவாரசியமான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிரீதியான பயணங்களைத் தேர்வு செய்தனர்.

1999-ஆம் ஆண்டளவில் உள்நாட்டுக் கப்பல் தொழில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஜான் பத்து வருடங்களுக்கும் மேலாக அதிக உழைப்பாளியாக வேலை செய்து வந்தார். இதனால் அவருக்குக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. அவரும் எல்ஸும் நிலப்பகுதிக்குக் குடியேறினர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஒரு படகில் வசிக்கத் தொடங்கினர். அது பொறுக்க முடியாத அளவுக்கு முடியாத அளவுக்கு ஆனதும், அவர்கள் தங்கள் விசாலமான கேம்பர்வேனை (வீடு போன்ற வசதிகளைக் கொண்ட ஒரு நான்கு சக்கர வாகனம்) வாங்கினார்கள்.

ஜானுக்கு 2003-இல் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலை சரியாகவில்லை. அவரால் வேலை செய்ய இயலவில்லை. மேலும் வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார். எல்ஸ் கற்பிப்பதில் மிகவும் பிஸியாக இருந்தார். சில நேரங்களில் அவர்கள் கருணைக்கொலை பற்றி உரையாடினர். வாழ்க்கையை முடித்துக்கொள்வதைப் பற்றி அவர்கள் விவாதித்த தருணங்கள் இருந்தன. ஜான் தனது உடல் ரீதியான தடைகளைக் கருத்தில் கொண்டு நீண்ட காலம் வாழ விரும்பவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் விளக்கினார்.

இந்த நேரத்தில்தான் தம்பதியினர் 'NVVE' என்னும் நெதர்லாந்தின் 'இறப்பதற்கான உரிமைகள்' அமைப்பில் சேர்ந்தனர்.

"நீங்கள் நிறைய மருந்துகளை உட்கொண்டால், நீங்கள் ஒரு நடைபிணமாக போல வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்," என்று ஜான் என்னிடம் கூறினார்.

"எனவே, என்னுடைய உடல் உபாதைகள் மற்றும் எல்ஸின் நோயால், இதனை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்," என்றார்.

"முடித்து கொள்ள நினைக்கிறேன்" என்று ஜான் குறிப்பிட்டது அவர்களின் வாழ்க்கையை!

2018-இல், எல்ஸ் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு அப்போது டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தது. ஆனால் மருத்துவரைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டார். ஒருவேளை எல்ஸ் தனது தந்தையின் நிலை மோசமடைந்து, அல்சைமர் நோயிலிருந்து காலமானதைக் கண்டதால் அந்த நோய்க்கு சிகிச்சை பெற விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அறிகுறிகள் அதிகமாகி, புறக்கணிக்க முடியாத ஒரு சூழல் வந்தது.

இரட்டை கருணைக்கொலை

நவம்பர் 2022-இல், டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, எல்ஸ் தனது கணவரையும் மகனையும் விட்டுவிட்டு மருத்துவரின் ஆலோசனை அறையை விட்டு வெளியேறினார்.

"எல்ஸ் மிகவும் கோபமாக இருந்தார்,” என்று அந்த தருணத்தை ஜான் நினைவு கூர்ந்தார்.

எல்ஸ் தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாது என்பதை அறிந்த பிறகு, அவரும் ஜானும் தங்கள் மகனுடன் இரட்டை கருணைக்கொலை பற்றி விவாதிக்கத் தொடங்கினர். இருவரும் ஒன்றாக இறக்க திட்டமிட்டனர்.

நெதர்லாந்தில், கருணைக்கொலை மற்றும் தற்கொலை செய்துகொள்வது சட்டப்பூர்வமானது. நெதர்லாந்தில், நோயாளி தானாக முன்வந்து கோரிக்கையை விடுத்து, அவர்களின் உடல் அல்லது மன துன்பம் 'தாங்க முடியாதது' என்று மருத்துவ நிபுணர்களால் கருதப்பட்டால், அது குணமடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தால், தற்கொலை மற்றும் கருணைக்கொலை அங்கு அனுமதிக்கப்படுகிறது.

தற்கொலைக்கு உதவி கேட்கும் ஒவ்வொரு நபரும் இரண்டு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள், இரண்டாவது மதிப்பீடு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.

டிமென்ஷியா நோயாளிகளுக்குக் கருணைக்கொலை

2023-ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் 9,068 பேர் கருணைக்கொலையால் இறந்தனர் - மொத்த இறப்புகளின் எண்ணிக்கையில் இது 5% ஆகும். 33 இரட்டை கருணைக்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, எனவே 66 பேர் இதனால் இறந்துள்ளனர்.

கருணைக்கொலை கோரும் தம்பதியில் ஒருவருக்கு டிமென்ஷியா பாதிப்பு இருந்தால், அவர்களின் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள் என்பதால் சூழல் சிக்கலாகும்.

ராட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் மருத்துவ மையத்தில் உள்ள முதியோர் மருத்துவரும், நெறிமுறை நிபுணருமான மருத்துவர் ரோஸ்மரிஜ்ன் வான் ப்ரூச்செம் கூறுகையில், “டிமென்ஷியா நோயாளிக்கு கருணைக்கொலை செய்வதைப் பற்றி யோசிப்பதை கூட நிறைய மருத்துவர்கள் விரும்பவில்லை,” என்கிறார்.

இது ஜான் மற்றும் எல்ஸின் நிலை. மருத்துவர்களிடையே உள்ள அந்த தயக்கம் கருணைக்கொலை புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கிறது. 2023-இல் இறந்த ஆயிரக்கணக்கானவர்களில் 336 பேருக்கு டிமென்ஷியா இருந்தது. டிமென்ஷியா நோயாளிகளின் 'தாங்க முடியாத துன்பத்திற்கான' சட்டத் தேவையை மருத்துவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்?

ஆரம்ப நிலை டிமென்ஷியா பிரச்னை உள்ள பலருக்கு, உடல்நலனில் எப்படி முன்னேற்றம் இருக்கும் என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையே அவர்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்வது பற்றி சிந்திக்க வழிவகுக்குகிறது என்று மருத்துவர் வான் புருசெம் விளக்குகிறார்.

"என்னால் முக்கியமான விஷயங்களை இனி செய்ய முடியாமல் போகுமோ? என்னால் இனி என் குடும்பத்தை அடையாளம் காண முடியாமல் போகுமோ? என்ற நிலையில் இருக்கும் நோயாளிகள், அதை வெளிப்படுத்தும் நிலையில் இருந்தால் போதும். கருணைக்கொலை செய்யத் தயாராக இருக்கும் மருத்துவர் மற்றும் மனத் திறனில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஆகிய இருவருக்குமே நோயாளிகள் சொல்வது புரிந்தால், கருணைக்கொலையைப் பரிசீலிக்க வேண்டும்," என்றார்

இரட்டைக் கருணைக்கொலையில் உள்ள சிக்கல்கள்

அவர்களின் குடும்ப மருத்துவருக்கு இதில் ஈடுபாடு இல்லாததால், ஜான் மற்றும் எல்ஸ் ஒரு கருணைக்கொலை கிளினிக்கை (mobile euthanasia clinic) அணுகினர் - கருணைக்கொலை குறித்த நிபுணத்துவ மையம் அது. இது கடந்த ஆண்டு நெதர்லாந்தில் 15% கருணைக்கொலை இறப்புகளை மேற்பார்வையிட்டது. சராசரியாக அது பெறும் கோரிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கை ஏற்றுக் கொள்கிறது.

ஒரு தம்பதி தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க விரும்பினால், ஒரு இணையரின் முடிவு மற்றவரை பாதிக்கவில்லை என்பதில் மருத்துவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இருவருக்குமே சம்மதம் இருக்க வேண்டும்.

மருத்துவர் பெர்ட் கெய்சர் இரண்டு இரட்டைக் கருணைக்கொலை கோரிக்கைகளைக் கையாண்டிருக்கிறார். அவர் ஒரு வித்தியாசமான தம்பதியை நினைவுக்கூர்ந்தார். அந்த நபர் தனது மனைவியை கருணைக்கொலைக்கு வற்புறுத்துகிறாரோ என்று மருத்துவருக்குச் சந்தேகம் வந்தது. அடுத்த சந்திப்பின் போது, மருத்துவர் கெய்சர் அந்தப் பெண்ணுடன் தனியாகப் பேசினார்.

"அவர் பல திட்டங்களை வைத்திருப்பதாக சொன்னார்," என்று மருத்துவர் கெய்சர் கூறுகிறார்.

அந்தப் பெண் தனது கணவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை தெளிவாக உணர்ந்தார், ஆனால் அவருடன் இறக்கும் திட்டம் அந்தப் பெண்ணுக்கு இல்லை.

மருத்துவர் இதனை அறிந்ததும் அவர்களின் கருணைக்கொலை செயல்முறை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த நபர் நோய்வாய்பட்டு இறந்தார். அவருடைய மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறார்.

ஒன்றாக இறத்தல்: மகிழ்ச்சியான தம்பதி வாழ்வை முடித்து கொள்ள முடிவெடுத்தது ஏன்?
படக்குறிப்பு, எல்ஸ் மற்றும் ஜ��ன் அவர்களின் திருமண நாளில், 1975

'வேறு தீர்வு இல்லை'

புராட்டஸ்டன்ட் தியாலஜிகல் பல்கலைக்கழகத்தின் சுகாதார நெறிமுறைகள் பேராசிரியரான டாக்டர் தியோ போயர், நெதர்லாந்தில் கருணைக்கொலையை வெளிப்படையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். அவர் , நோய்த்தடுப்பு சிகிச்சையின் முன்னேற்றம் கருணைக்கொலை பயன்பாட்டின் தேவையைக் குறைக்கிறது என்று நம்புகிறார்.

“என்னைப் பொறுத்தவரை மருத்துவரால் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியும். இருப்பினும், அது மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்,” என்கிறார்.

டாக்டர் போயர் மேலும் கூறுகையில், “கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இரட்டைக் கருணைக்கொலை வழக்குகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரும் அவரது மனைவியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தம்பதியாக இறப்பதைத் தேர்ந்தெடுத்து, உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிறகு அதன் தாக்கம் மேலும் அதிகரித்தது.

"கடந்த ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட இரட்டைக் கருணைக்கொலை வழக்குகளை நாங்கள் பார்த்தோம், மேலும் ஒன்றாக இறப்பதை போற்றும் (hero-ify) போக்கு உள்ளது," என்றார்.

ஜானும் எல்ஸும் தங்கள் கேம்பர்வேனில் காலவரையின்றி வாழலாம். அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்களா?

"இல்லை, இல்லை, இல்லை - என்னால் அதைப் பார்க்க முடியாது," என்று எல்ஸ் கூறுகிறார்.

அவரது கணவர், "எனக்கு இனி வலி வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்," என்று பதிலளித்தார். "நாம் வழிநடத்திய வாழ்க்கை நம்மை முதுமையாக்குகிறது. அதன் காரணமாக மட்டுமே அது முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார்.

இன்னும் ஒரு பிரச்னை இருக்கிறது. மருத்துவ வல்லுநர்களால் எல்ஸின் மதிப்பீட்டின்படி, அவரது டிமென்ஷியா மோசமடைந்தால் அது மாறக்கூடும் என்றாலும், தன் வாழ்க்கையை எப்போது, ​​எப்படி முடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் திறனை அவர் இன்னும் பெற்றிருக்கிறார்.

ஜான் மற்றும் எல்ஸின் மகனுக்கு, இவை எதுவும் எளிமையானதாக இல்லை.

"உங்கள் பெற்றோரை இழக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள்," என்று ஜான் விளக்குகிறார்.

"எனவே மகன் கண்ணீர் விடுவார் தான். அவர் 'நல்ல காலம் வரும்' என்றார். ஆனால் எனக்கு வருத்தம் இல்லை,” என்கிறார் ஜான்.

எல்ஸ் அதையே உணர்கிறார்.

"வேறு தீர்வு இல்லை," என்பதே அவர்களின் நிலைபாடு.

இறுதி நாள்

கருணைக்கொலை செய்ய மருத்துவர்களுடன் அவர்கள் சந்திப்புக்கு முந்தைய நாள், எல்ஸ், ஜான், அவர்களது மகன் மற்றும் பேரக்குழந்தைகள் ஒன்றாக இருந்தனர். நல்ல நிலையில் இருக்கும் தன் கேம்பர்வேனின் தனித்துவத்தை ஜான் விளக்க விரும்பினார், எனவே அது விற்பனைக்குத் தயாராக இருக்கும்.

"நான் என் அம்மாவுடன் கடற்கரையில் நடந்து சென்றேன்," என்று அவர்களது மகன் கூறுகிறார். "குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், வேடிக்கையான தருணங்கள் இருந்தன... அது மிகவும் வித்யாசமான நாள்,” என்கிறார்.

"நாங்கள் இரவு உணவு சாப்பிட்டது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அந்த இறுதி இரவு உணவை சாப்பிடுவதைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்தது,” என்கிறார்.

திங்கள்கிழமை காலை, அனைவரும் உள்ளூர் மருத்துவமனையில் கூடினர். தம்பதியரின் சிறந்த நண்பர்கள், ஜான் மற்றும் எல்ஸ் இருவரின் சகோதரர்களும், அவர்களின் மருமகளும் தங்கள் மகனுடன் இருந்தனர்.

"டாக்டர்கள் வருவதற்கு முன்பு நாங்கள் இரண்டு மணிநேரம் ஒன்றாக இருந்தோம்," என்று அவர் கூறுகிறார்.

"நாங்கள் எங்கள் நினைவுகளைப் பற்றி பேசினோம் ... நாங்கள் இசையைக் கேட்டோம்."

"இறுதி அரை மணி நேரம் கடினமாக இருந்தது," என்று அவர்களின் மகன் கூறுகிறார்.

"டாக்டர்கள் வந்தார்கள், எல்லாம் சீக்கிரமாக நடந்தது. அவர்கள் தங்கள் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள், பின்னர் அதற்கு ஒரு நிமிடம் ஆகும்,” என்கிறார்.

எல்ஸ் வான் லீனிங்கன் மற்றும் ஜான் ஃபேபர் ஆகியோருக்கு மருத்துவர்கள் மரணமடையும் மருந்துகளை வழங்கினர் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திங்கள்கிழமை ஒன்றாக அவர்கள் இறந்தனர்.

அவர்களின் கேம்பர்வேன் இன்னும் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. எல்ஸ் மற்றும் ஜானின் மகன் அதைச் சிறிது காலம் தன்னுடன் வைத்திருக்க முடிவு செய்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதில் விடுமுறைக்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.

"காலம் வரும்போது அதை விற்பேன்," என்று அவர் கூறுகிறார். "முதலில் நான் என் குடும்பத்திற்குச் சில நினைவுகளை உருவாக்க விரும்புகிறேன்," என்கிறார் தீர்க்கமாக.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)