அண்மையில் வேலையிட விபத்தில் இந்திய ஊழியர் சீனிவாசன் சிவராமன் அகால மரணமட��ந்த செய்தி பலரையும் உலுக்கியது. இழப்பு நேர்ந்த குடும்பத்திற்கு நன்கொடைகளும் உதவிகளும் வழங்க பல வாசகர்கள் முன்வந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மே 23ஆம் தேதியன்று சுவா சூ காங்கில் உள்ள பொதுப் பயனீட்டுக் கழக நீர்நிலைய சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நச்சுவாயுவை சுவாசித்ததால் சிவராமன் உயிரிழந்தார்.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. $20,000ஆக இருந்த வேலையிடத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் அதிகபட்ச அபராதத் தொகை ஜூன் 1ஆம் தேதி முதல் $50,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிக அதிகமான அளவில் 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட 46 ஊழியர் மரணங்களை முன்னிட்டு செப்டம்பர் 2022 முதல் மே 2023 வரை அபாயம் நிறைந்த துறைகளில் உயர்மட்டப் பாதுகாப்பு நடைமுறைகள் அமலாக்கப்பட்டன. வேலையிடங்களில் கூடுதல் சோதனைகள், பாதுகாப்புக்கான பயிற்சிகள் என்று பல வழிகளில் மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டது. 2023ஆம் ஆண்டில் வேலையிட இறப்புகள் 36 ஆகக் குறைந்தன.
அரசாங்கத்தின் விதிமுறைகள், சட்ட நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் நிறுவனங்களும் கடும் முயற்சி எடுக்கவேண்டும். இதில், உயிர்களைக் காக்கும் மனிதாபிமான உணர்வு அடிப்படையானது. அதேநேரத்தில் வேலையிடத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதே பொருளியலில் முன்னேறுவதற்கான வழி.
பாதுகாப்பைக் கடைபிடிக்காமல் இருந்தால் மோசமான பின்விளைவுகள் விளையலாம்.
வேலையிட விபத்துகளில் ஊழியர்களுக்கு உயிர்ச்சேதம், காயம் ஏற்படும்போது கட்டட, கட்டுமான ஆணையம் விதிக்கும் மதிப்பீடுகள் குறைகின்றன. இதனால் எதிர்காலத் திட்டப்பணிகளுக்கான ஏலக்குத்தகைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.
பாதுகாப்புக் குறைவால் விபத்து நிகழ்ந்தால் மனிதவள அமைச்சு அந்த நிறுவனத்திற்கு வேலை நிறுத்த உத்தரவு விதிக்கலாம். வழக்கமாக இத்தகைய வேலை நிறுத்தம் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும். காப்பீட்டுத் தவணைத் தொகை அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு.
நிதி சார்ந்த அடியுடன், நிறுவனத்தின் துறை சார்ந்த மதிப்பிற்கும் அடி விழும்.
மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள “செக்சேவ்” (CheckSafe) இணையவாசலில் நிறுவனங்களின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தரம், ஊழியர் காயமடைந்த சம்பவங்கள், அதிகாரிகளின் அமலாக்கத் தரவுகள் ஆகிய தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு தெள்ளத்தெளிவாக வழங்கப்படுகின்றன.
நிறுவனம் அதன் நலனுக்காக வேலையிடப் பாதுகாப்பை வலுப்படுத்துவதே சாலச்சிறந்தது.
புதிதாக வேலையில் சேரும் ஊழியர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதகங்கள் வரை முறையான பயிற்சி வழங்கவேண்டும். ஓர் ஊழியர் முழுமையான பயிற்சியைப் பெரும் வரையில் கடினமான வேலைகளைக் குறைத்துகொள்ளவேண்டும்
ஊழியர்கள் இயந்திரம் அல்ல. அவர்கள் மனிதர்கள் என்பதை முதலாளிகள் உணர்ந்தால், பாதுகாப்பின் மீதான கண்ணோட்டம் மாறும். அது நிறுவனத்தின் வேலையிட கலாசாரத்தையும் மாற்றும்.
தங்களின் கவலைகளையும் புகார்களையும் ஊழியர்கள் அச்சமில்லாமல் தெரிவிக்கும் ஒரு சூழல் இருக்கும்பட்சத்தில் வேலையிடத்தில் பல பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட முடியும்.
பாதுகாப்பாற்ற வேலையிடம் குறித்து ஊழியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். வேலை, பணம் எதுவுமே உயிருக்கு ஈடல்ல. வேலையிடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து மேலதிகாரியிடம் தெரியப்படுத்தவோ, நிறுவனம் அக்கறைகாட்டாதபோது அமைச்சிடம் தெரிவிக்கவோ தயங்கக்கூடாது. பாதுகாப்பான வேலை முறைகள் தொடர்பான பயிற்சிகளில் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். பழக்கமானவர்கள் புதிய ஊழியர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.
உலகத் தரத்தில் சிங்கப்பூரின் வேலையிட பாதுகாப்பு இருந்தாலும் இன்னும் சென்றடைய வேண்டிய தூரம் உள்ளது. ஒவ்வோர் உயிரும் முக்கியம். உயிர்ப்பலியும் கடும் காயங்களும் இல்லாத நிலையை எட்டுவதே நம் இலக்கு. அதை அடைய ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வோர் ஊழியரும் பங்காற்ற வேண்டும்.